Monday, November 14, 2011

இலங்கையின் கல்விமுறை ஆரம்பம்: ஆய்வுகட்டுரை

கல்வி என்னும் ஒளிவிளக்கை ஏற்றிவைக்கும் சமுதாயத்தில் அறியாமை என்னும் இருள் விலகிநிற்கும். ஒரு விளக்கிலிருந்து ஓராயிரம் விளக்குகளைக் கூட ஏற்றலாம். அவ்விதமே ஒருவர் பெறும் கல்வியானது அவருக்கு மட்டுமன்றி முழுச்சமூகத்திற்குமே நன்மைகளை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் தான் 'அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலிலும் பார்க்க ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது உத்தமம்' என்று அறிஞர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். கற்றறிந்தவனுக்கு தன்ஊரில் மட்டுமன்றிச் சென்ற ஊர்களிலெல்லாம் சிறப்புகள் ஏற்படும் என்று திறந்தநிலைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கல்வி என்னும் பெருஞ்செல்வத்தைப் பெறுவதற்காக அக்காலத்திலிருந்து இக்காலம் வரை பல்வேறு சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளான். குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்று ஏனைய கோள்களிலும் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சி வரை முன்னேறியுள்ளான். குகைகளில் கோடுகள், குறியீடுகள் எனத் தொடங்கிய எழுத்துப்பயணம் கணனிமொழிகள் வரை பல்வேறு ஊடகங்களினூடாக சென்று கொண்டிருக்கிறது. எண்ணங்களை, அனுபவங்களை, கண்டுபிடிப்புக்களை அடுத்தவருக்கு கூறப்பயன்படுத்திய சாதனங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறு காரணங்களால் அழிவடையக் கூடியனவாக இருந்தாலும் பெறப்பட்ட அறிவை அடுத்தவருக்கு வழங்கும் செயற்பாடு நின்றுவிடாமல் தொடர்கின்றது.

வரிவடிவக் கல்வி, வாய்மொழிக் கல்வி என்னும் வரிசையில் பல்வேறு சாதனங்கள் கல், களிமண், தோல்கள், பலகைகள், இலைகள், புல்வகைகள், உலோகத்தகடுகள் எனப் பதிவுகளை மேற்கொள்ளப் பயன்பட்டன. அச்சுயற்திரம், காகிதம் என்பவற்றின் கண்டுபிடிப்புகளின் பின் நூல்கள் உருவாகின. இந்நூந்களினூடாக ஒரே சமயத்தில் பலரும் பல இடங்களிலும் அறிவைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகியது. நூல்கள் பெருகப்பெருக அவற்றை பெற்று பயன்படுத்தியவர்கள் அதனை பேணிப் பாதுகாக்கத் தலைப்பட, நூலகங்கள் என்னும் புதிய சிந்தனையும் பிறந்தது. சமயநிறுவனங்கள் தொடங்கி கல்விநிறுவனங்கள் வரை நூலகத்தின் செல்வாக்கு விரிவுபட்டது. கற்பதற்கு நூல்களின் அவசியம் உணரப்பட, கற்பவர் தொகையும் அதிகரிக்க நூல்கள் பலதுறைகளிலும் வெளிவரலாயின. எல்லோருக்கும் எல்லா நூல்களும் கிடைக்க வாய்ப்பிருக்காது. நூல்களின் வியாபகம், பரவல், என்பவற்றுடன் அதன் உற்பத்தி செலவுகளுக்கான விலையும் சம்பந்தப்பட்டுள்ளது. இலவசமாகக் சிடைக்கும் வாய்ப்பிருந்தால் சகலருக்கும் பயன்படும் என்ற நிலை உருவாக நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளினூடாக நூலக சேவைகள் வழங்கப்படும் வழக்கம் மேல்நாடுகளில் ஆரம்பமாகியது.
குருகுலக்கல்வி முறை நிலவிய காலத்திலும் கல்வி கற்பிக்கும் பணிக்காகவே உருவாகியுள்ள கல்வி நிறுவன முறையுடைய இக்காலத்திலும் கற்பித்தலுக்கும் கற்பித்தலுக்குமான ஏடுகள், நூல்கள் என்பன அப்பணியில் ஈடுபடுவோருக்கு எளிதில் கிடைத்தல் வேண்டும். இதற்கான சகல சாத்தியப்பாடுகளையும் உடைய நிறுவங்களாக நூலகங்கள் அமைகின்றன.

திண்ணைப்பள்ளிகள் மூலமும் குரு-சிஷ;யமுறையிலும் அறிவின் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டாலும் ஒருவன் தானே அவற்றை உள்வாங்கி விருத்தி செய்வதன் ஊடாகவே கல்வியின் பயனைப் பெறமுடியும். இலங்கையில் மேனாட்டாரின் வருகையுடன் அச்சுயந்திரம், கல்விமுறைமைகள், நூல்கள் என்பன அறிமுகமாயின. கல்வி ஒரு சிலரின் சொத்தாகவே விளங்கிய காலகட்டத்தில் மேனாட்டாரின் முயற்சிகள் முழு இலங்கையிலும் கல்வியைப் பெறவேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. சுமயத்தின் ஊடாகவும் சமூகத்தின் பல நிலைப்பட்டவர்களிடையே மேனாட்டாரின் பணிகள் ஊடுருவின.
இனி நாட்டின் தேசிய இனங்களிடையே மேனாட்டவரின் கல்வி நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் பெரும் புரட்சியை உருவாக்கின. தமது மொழி, சமயம், கலாசாரத்தன்மை இவற்றில் குறுக்கீடு செய்த செயல்களினை ஒரு காலகட்டத்தில் பொறுக்க முடியாதநிலை உருவாகியது. மேனாட்டார் செய்த சமயப் பிரச்சார உத்திகள் கல்விநிறுவன அமைப்புகள் போன்று சுதேச மக்களாகிய அறிஞர்கள், செல்வந்தர்கள், ஆன்மீகவாதிகள் ஆரம்பித்தனர். அவ்வகையில், மேனாட்டாரால் ஆரம்பிக்கப்பட்ட கல்விநிறுவனங்களைப் போன்று சுதேசமக்களும் ஆர்வங் காரணமாகவும், ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும் ஆரம்பித்தனர்.
இதன் மூலம் காலப்போக்கில் 'அனைவருக்கும் கல்வி' என்னும் சாத்தியப்பாடு தோன்றலாயிற்று. அரசாங்கங்களும் காலத்துக்கு காலம் வழங்கிய உதவிகளையும் நன்கொடைகளையும் விரிவுபடுத்தி அரச நிருவாகக் கட்டமைப்புக்களை கல்விசார்ந்து நிறுவலாயிற்று.

கற்றவர் தொகை அதிகரித்ததன் பேரில் நூல்களின் பாவனையும் வாசிப்பு கலாச்சாரமும் மேம்படலாயின. கல்விநிறுவனங்கள், சமயநிறுவனங்கள் மட்டுமன்றி தனிநபர்களும் நூல்களைச் சேகரித்து பாதுகாக்கத் தலைப்பட்டனர். தனிநபர்களின் சேகரிப்புகள் அவர்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பயன்பட்டன. சிலர் அவர்களிடம் பெற்றுப்பயன்படுத்துவதன் மூலம் வாசிப்பின் அனுபவத்தைப் பெறலாயினர். இதே சமயம் இலங்கையிலும் இந்தியாவிலும் பலவிதமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உருவாயின. நாளாந்தம் நடைபெறும் உலகவிடயங்களை அறிதல் என்பதை நாளாந்தக் கடமையாக்குகின்ற முறை உருவாகியது. உலகயுத்தங்களின் தகவல்கள், நாட்டுக்கு நாடு அபிவிருத்திக்கான சிந்தனைகள் உலகநாடுகளை ஒன்றாக இணைக்கத் துணையாயின.
ஏற்கனவே பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நூலகங்கள் அத்துறை சார்ந்தவர்களுக்குப் பயன்பட்டு வந்தன. இலங்கையில் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பொதுசன நூலகங்களை அமைக்கத் தலைப்பட்டது.

1 comment: